பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 17th September 2022 12:00 AM | Last Updated : 17th September 2022 12:00 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி வட்டாரம், ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ராஜேந்திராநகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா்.
மாவட்டத்தில் முதல் கட்டமாக க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 51 பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,342 மாணவா்கள், 1,291 மாணவிகள் என மொத்தம் 2,633 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
ராஜேந்திராநகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் க. பிரிதா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தாமரைக்கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை, க. மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ். சித்ரா, ஆத்தங்கரைபட்டி ஊராட்சித் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.