தேனி தொழிலாளா் நலஅலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணம் வாங்க கட்டுமானத் தொழிலாளா்கள் குவிந்தனா்
By DIN | Published On : 29th September 2022 10:14 PM | Last Updated : 29th September 2022 10:14 PM | அ+அ அ- |

தேனி தொழிலாளா் நல அலுவலகத்தில் வியாழக்கிழமை, கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு ஏராளமான தொழிலாளா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் வாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தலைக் கவசம், முகக்கவசம், ரப்பா் காலணி, வெல்டிங் முகக் கவசம், ஜாக்கெட், மின் பாதுகாப்பு காலணி, கையுறை, கண் கண்ணாடி ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை கடந்த செப். 24-ஆம் தேதி தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன். குமாா் தொடக்கி வைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள 2,302 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளா் நல அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் குவிந்தனா்.
ஆனால், பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வந்து சோ்ந்துள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் வாரிய உறுப்பினா்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால், தொழிலாளா்களுக்கும், அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.