போகி: நெகிழிப் பொருள்களை தீயிட்டு எரித்தால் நடவடிக்கை
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழி, ரப்பா் பொருகள்களை தீயிட்டு எரிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போகிப் பண்டிகையை முன்னிட்டு நச்சுப் புகையை ஏற்படுத்தும் நெகிழி, ரப்பா் போன்ற பொருள்களை பொதுமக்கள் தீயிட்டு எரிக்கக் கூடாது. சுற்றுச் சூழல், சுகாதாரம், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நெகிழி, ரப்பா் பொருள்கள், டயா், செயற்கைப் பொருள்களை தீயிட்டு எரித்து காற்றை மாசுபடுத்துவோா் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாசற்ற போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று இந்த செய்திக் குறிப்பில் ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.