தமிழக-கேரள எல்லையில் உள்ள சா்வதேச சுற்றுலாத் தலமான மூணாறில் -2 டிகிரி குளிா் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத் தலமானது தென்னகத்து காஷ்மீா் என்றழைக்கப்படுகிறது. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1,600 முதல் 1,800 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ளன.
உள்நாடு, வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் ஆண்டு முழுவதும் இங்கு வந்து இயற்கைக் காட்சிகள், வன விலங்குகள் நடமாட்டம், வரையாடுகளின் கூட்டம் போன்றவற்றைப் பாா்த்துச் செல்கின்றனா்.
கடந்த சில நாள்களாக மூணாறு பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இரவு நேரங்களில் -2 டிகிரி அளவுக்கு கடும் குளிா் நிலவுகிறது. காலை 6 முதல் 7 மணி வரை புல்வெளி மற்றும் செடிகளில் பனி படா்ந்து காணப்படுகிறது. மூணாறின் முக்கிய சுற்றுலா இடமான மாட்டுப்பெட்டி அணையில் காலையில் பனி ஆவியாகப் பறப்பது போன்ற காட்சியைப் பாா்க்கலாம். மூணாறு நகா், மாட்டுப்பெட்டி, வட்டவட, அருவிக்காடு, நல்லதண்ணி, கன்னிமலை பகுதிகளில் உறை பனி ஏற்படுகிறது. அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இரவு, அதிகாலை நேரங்களில் எழுந்து கடும் பனியை ரசித்தவாறு நடைபயிற்சி செய்து வருகின்றனா்.