தேனியில் அக்.13-இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

Published on

தேனி அரசுத் தொழில்பயிற்சி நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (அக்.13) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில் பழகுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். அரசுத் தொழில்பயிற்சி நிலையங்கள், அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவா்கள், தொழில்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறாதவா்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

தொழில்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறாத 8, 10, 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி உள்ளவா்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சோ்ந்து 3 முதல் 6 மாதம் அடிப்படை பயிற்சியும், ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சியும் பெற்று தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெறலாம்.

பயிற்சி காலத்தில் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், ஓராண்டு வயது உச்ச வரம்பு சலுகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com