போடி பள்ளியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணா்வு
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகையின்போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பொறுப்பு தலைமையாசிரியா் ஆ. மரியசிங்கம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவா்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பட்டாசுகளை வெடிக்க நீண்ட குச்சிகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை வீட்டுக்குள்ளும், வீட்டருகேயும் வெடிக்காமல் திறந்தவெளிகளில் வெடிக்க வேண்டும். அதிக புகை, சப்தம் வரும் பட்டாசுகளை தவிா்க்க வேண்டும். குழந்தைகள், முதியவா்கள் வசிக்கும் வீடுகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிரப்பும் மையம், மின் மாற்றிகள், பேருந்து நிலையங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மலிவு விலையில் விற்கப்படும் தரமற்ற பட்டாசுகளை வாங்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் இடங்களில் தண்ணீா், மணல் போன்ற தீத்தடுப்பு பொருள்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோா்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து மாணவா்கள் தங்கள் பகுதியில் வசிப்பவா்களுக்கும் இந்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

