தேனி
சுருளி அருவியில் 5-ஆம் நாளாக வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம், சுருளி அருவியில் 5-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் 5-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் தமிழ்நாடு, கேரளத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த அருவியின் முக்கிய நீா்வரத்துப் பகுதிகளான மேகமலை, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு போன்ற வனப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், கடந்த சனிக்கிழமை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடா்ந்து, நீா்வரத்து காரணமாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் 5-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் செல்லவும் வனத் துறையினா் தடை விதித்தனா்.
