அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் அமைக்கப்படும் 2 சிறுவர் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அஜீஸ்நகர் ரயில்வே நிலையம் அருகேயும், வசந்தநகர் பகுதியிலும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நிதிப்பற்றாக்குறையால் இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மேலும் காலதாமதமானால் இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுக் கருவிகள் மற்றும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட விளையாட்டு சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே பழுதடைந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.