சாத்தூரில் ஆடுவதை கூடம் முறையாக செயல்படுவதை நகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆடுகள் வெட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆட்டு இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி விற்கப்படுவதை தடுக்க, சாத்தூர் நகராட்சி உள்கட்டமைப்பு வெற்றிடம் நிரப்புதல் நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தில் சாத்தூர் வெள்ளைகரை சாலையில் ஆடுவதை கூடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபட்டது.
இந்த ஆடுவதை கூடத்தில், ஆடுகள் வெட்டப்பட்டு, பின்னர் நகராட்சி சார்பில் சீல் வைக்கபட்டு பின்னர்தான் கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால், தற்போது ஆட்டு இறைச்சி கடைகளிலேயே ஆடுகள் சுகாதாரமற்ற முறையிலும், சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதியிலும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை அந்த பகுதியிலேயே விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கடைகளில் ஆடுகளை வெட்டுவதை தவிர்த்து, ஆடுவதை கூடத்தில் ஆடுகளை வெட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: சாத்தூர் ஆடுவதை கூடத்தில், ஆடுகளை வெட்டுவதற்கு தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிளும் உள்ளன. கடைகளில் ஆடுகள் வெட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்து, ஆடுவதை கூடத்தில் ஆடுகள் வெட்டப்படுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.