பதினைந்து நாள்களாக குடிநீர் வழங்காததால் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் நகராட்சி பாத்திமாநகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 500 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்களுக்கு, 6 நாள்களுக்கு ஒருமுறை அங்குள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, நகராட்சி பூங்காவில் உள்ள மின் மோட்டார் மூலம் குடிநீர் பம்ப் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், மேம்பால பணிக்காக ராமமூர்த்தி சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவடையாத காரணத்தால், நகராட்சி பூங்கா மற்றும், ராமமூர்த்தி சாலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்பட பல பகுதியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. இதன் காரணமாக, பாத்திமாநகரின் 60 அடி சாலை பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கி 15 நாள்களுக்கும் மேல் ஆனதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். ராமமூர்த்தி சாலையில் குழாய்கள் பதிக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோஷமிட்டனர். அங்கு வந்த நகராட்சி உதவி பொறியாளர் முருகேஷ், பஜார் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாத்திமா நகர் 60 அடி சாலைப் பகுதிக்கு வியாழக்கிழமை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், நகர செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.