மாணவர்களுக்கான புதிய சுகாதார திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் உள்ள 160 ஆசிரியர்களுக்கு லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமை வகித்தார்.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
பயிற்சியைத் தொடங்கி வைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் பேசியதாவது: 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசாங்கத்தால் புதிய சுகாதாரத் திட்டம் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்த்யா காரியாகிராம் தொடங்கப்பட்டது. இது தொழில்நுட்ப ரீதியாக குழந்தை நலம் கண்டறிதல் மற்றும் ஆரம்பகால தலையீடு சேவைகள் என்று அழைக்கப்படுகிறது. சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுகிறது.
பிறப்பு குறைபாடுகள், நோய்கள், குறைபாடுகள், இயலாமை, வளர்ச்சி தாமதங்கள் ஆகியவற்றைக் கண்டறிவதன் மூலம் விரிவான சுகாதார பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். நாடு முழுவதும் இதுபோன்று குறைபாடுள்ள 27 கோடி குழந்தைகளை கண்டறிவதை இலக்காகக் கொண்டுள்ளது.
பிறந்தது முதல் 18 வயது வரையுள்ளவர்கள் இத் திட்டத்தில் பயன் அடையலாம். ஆசிரியர்கள் இது போன்ற குறைபாடுள்ள பள்ளி வயது மாணவர்களைக் கண்டறிந்து தக்க மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்.ரெட்டியபட்டி வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், டாக்டர்கள் மதன்குமார், சித்ரா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.