விருதுநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அனைத்து மருத்து வமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான உடல் வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இதன் காரணமாக குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும், நகர் பகுதியில் வாறுகால் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் ஆங்காங்கு தேங்கியுள்ளது. அதேபோல், சில இடங்களில் குப்பைகள் அள்ளப்படாதாதல் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக உருவான கொசுக்கள் கடிப்பதால் காலை நேரங்களிலேயே குழந்தைகள் வெளியில் வர முடியவில்லை. மேலும், பல வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், கிடைக்கும் குடிநீரை குடம் உள்ளிட்ட பாத்திரங்களில் எடுத்து சேமித்து வருகின்றனர். இவற்றில் சேமித்து வைக்கப்படும் குடிநீரை ஒரு சில வீடுகளில் மூடி வைப்பதில்லை. இதில் உருவான கொசுக்கள் கடிப்பதாலும் பலர் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு தலைமை மருத்துவமனை மட்டுமன்றி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கை, கால் மற்றும் உடல் வலியால் நடக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். நாளுக்கு நாள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, விருதுநகர் நகராட்சி பகுதி மட்டுமல்லாது, கிராம ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.