கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யக் கோரி  நகராட்சி அலுவலகத்தை ஆத்துமேடு பகுதி மக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே ஆத்துமேடு பகுதியில் பல நாள்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது.

விருதுநகர் அருகே ஆத்துமேடு பகுதியில் பல நாள்களாக கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 31 ஆவது வார்டில் சிவந்திபுரம் ஆத்துமேடு மற்றும் காட்டுத் தெரு முதலானவை உள்ளன. இப்குதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
 இந்நிலையில் ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரதான கழிவுநீர் வாய்க்கால் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால் வாய்க்கால்களில் குப்பைகள் தேங்கி, கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் நாள்தோறும் பொதுமக்கள் கொசுக் கடியால் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 
மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் இரவில் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர். 
இந்நிலையில் இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருசில நாள்களில் வாய்க்காலில் தேங்கிய குப்பைகள் முழுமையாக அகற்றப்படும். தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். 
இதில் மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் எல். முருகன், நகரக்குழு உறுப்பினர் பி. ராஜா உள்பட ஆத்துமேடு, சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com