மதுக் கடையை இடம் மாற்றக் கோரி கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி 

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் கிராம நிர்வாக அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
சோழபுரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் சோழபுரம், ஆசிலாபுரம், பணமேடு, நரிமேடு, இந்திரா காலனி, முறம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப் பள்ளிக்கு செல்லும் சாலையில், புதிதாக அரசு மது பானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி  இப்பகுதியில் பிரச்னை ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே இக் கடையை இடம் மாற்றக் கோரி கிராம மக்கள் பல முறை மாவட்ட ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை மனு அளித்துள்ளனர்.
அண்மையில் குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் மோதியதில் 6 ஆம் வகுப்பு மாணவர் ராஜ்குமார் தலையில் பலத்த காயமடைந்தார்.இதையடுத்து இக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி அப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மதுக் கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com