ஏழாயிரம்பண்ணையில் வாருகால்கள் தூர்வாரப்படாததால் அவை நிறைந்து பிரதான சாலையில் கழிவுநீர் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
சாத்தூர் அருகே பழைய ஏழாயிரம் பண்ணை, ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் சாலையோரத்தில் வாருகால் செல்கிறது.
இந்த வாருகால்கள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக சுத்தம் செய்யப்படாமல் பல மாதங்களாக உள்ளது.
இதனால் இங்குள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தொடர்ந்து வாருகாலில் சென்று கலப்பதால், வாருகால் நிறைந்து கழிவு நீர் சாலையில் செல்கிறது. வாருகால்களில் குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது.
சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் பல்வேறு வகையான தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது என இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் செல்லும் வாருகால் கழிவுநீரை அகற்றி முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.