சிவகாசியில் மாநில அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான கைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு கைப்பந்து கழகம், விருதுநகர் மாவட்ட கைப் பந்து கழகம், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மற்றும் சிவகாசியில் உள்ள மூன்று சுழற் சங்கங்கள் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. சிவகாசியில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு கைப்பந்துகழக பொதுச் செயலாளர் ஏ.சரவணன் தலைமை வகித்தார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் செ.அசோக் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் சி.சண்முகநாதன் வரவேற்றார். போட்டிகள் போட்டிகள் லீக் முறையில் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நிறைவு பெறுகின்றன. அன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.