தாமிரவருணி மகா புஸ்கரணிக்கு சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என,விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் விருதுநகர் மாவட்டத் தலைவர் க.த. சண்முகக்கனி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான், 12 ஆவது தடவையாக வருவதையொட்டி , திருநெல்வேலி தாமிரவருணியில் மகா புஸ்கரணி தீர்த்த விழா நடைபெற உள்ளது. இந்த விழா, அக்டோபர் 11 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, தாமிரவருணியில் புனித நீராட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வர உள்ளனர். எனவே, பக்தர்களுக்கு வசதியாக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில் இயக்க வேண்டும். இதன்மூலம், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட இயலும். பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையை பரிசீலித்து, ரயில் இயக்க வேண்டும் என அவர் அதில் கூறியுள்ளார்.