விருதுநகர் அருகே சின்னவாடியில் உள்ள கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில், அறை ஒன்று முற்றிலும் சேதமடைந்தது.
சிவகாசியை சேர்ந்த கனகவேல் மகன் ஜெய்சங்கர் என்பவர், சின்னவாடி கிராமத்தில் கார்னேசன் பேப்பர் கேப் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில், கேப் வெடி தயாரிக்கும் பணியில் சுமார் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேப் வெடியை ஒரு அறையில் காய வைத்துவிட்டு தொழிலாளர்கள் சென்றுவிட்டனர். பின்னர், உராய்வு காரணமாக பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில், அந்த அறையின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முற்றிலும் சேதமடைந்தன.
தகவலின்பேரில், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.
இது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.