விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி- அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள கோவிலாங்குளம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
அதில் தண்ணீர் வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கட்டுமானப் பணிகளும் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதி வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.