விருதுநகர் அருகே தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த மகனை ஆமத்தூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மருதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுப்புத்தாய். இவர்களது மகன் குருசாமி (30) கட்டட வேலை பார்த்து வருகிறார்.
இவர் செலவுக்கு பணம் கேட்டு தாயாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் பணம் கேட்டு குருசாமி தகராறு செய்துள்ளார்.
அப்போது சுப்புத்தாய் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த குருசாமி இரும்புக் கம்பியால், அவரைத் தாக்கினார். இதில், சம்பவ இடத்திலே சுப்புத்தாய் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பிச் சென்ற குருசாமி, மூளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார்.
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முருகேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில், ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.