விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ. சிவஞானம் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கூட்டரங்கில், வாக்கு சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அவர் பேசியது:
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,671 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நாளன்று வாக்கு சாவடிகளை பார்வையிட்டு நுண்பார்வையாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெப் கேமரா இல்லாத வாக்கு சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் முறையாக நடைபெறுகிறதா அல்லது விதிமுறைகள் ஏதேனும் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து, தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், தேர்தல் பார்வையாளர்களின் கீழ் 235 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகளில் வெப் கேமரா அமைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள நிகழ்வுகளை வெப் கேமரா மூலம் தேர்தல் ஆணையத்தில் இருந்தபடியே கவனிக்க இயலும். எனவே, இந்த வாக்கு சாவடிகளில் அலுவலர்கள் தனிக்கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், தேர்தல் பொதுப் பார்வையாளர் முகேஷ்குமார் சுக்லா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மு. ராசராசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்திக்குமாரி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) லோகநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.