விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சாய்பாபா ஜயந்தி விழா மற்றும் ஸ்ரீ ராமநவமி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில், கணபதி ஹோமம், ஸ்ரீ சுதர்சனம், ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர், விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
நண்பகல் 12 மணிக்கு, சாய்பாபாவுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் பாபா குறித்த பாடல்கள் பாடி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.