விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, குறிஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
குறிஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது கிராமத்துக்கு குடிநீர் கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியது: எங்கள் கிராமத்துக்கு கடந்த ஒருமாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
மேலும், எங்கள் கிராமத்தில் நூறு நாள் வேலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வேலை வழங்கப்படவில்லை. இதனால், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் எங்கள் கிராமத்தினருக்கு வழங்கவும், சீரான இடைவெளியில் குடிநீர் வழங்கவேண்டுமெனவும் கோரி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், பெண்களிடம் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.