அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் மாரியம்மன் திடலில், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலபாரதி பேசியதாவது:
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அதேபோல், சாத்தூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பணம் தரப்படுகிறது.
வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறும் பிரதமர் மோடி, தேனியில் துணை முதல்வர் மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்றார்.