விருதுநகரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 லட்சத்தை, தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே சின்னபேராலி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி மகன் வெயில்முத்து (23). இவர், விருதுநகரில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் எண்ணெய் நிறுவனத்தின் ரூ. 1.10 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மதுரை சாலையில் உள்ள தேவாலயப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலைக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த ரமேஷ் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் காவல் சார்பு-ஆய்வாளர் லோகிதாசன் ஆகியோர், வெயில்முத்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அத்தொகையை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர் திருப்பதியிடம் ஒப்படைத்தனர்.