விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் படிப்படியாக வெப்ப நிலை உயர்ந்து கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை 100 டிகிரியைக் கடந்து சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் இளநீர், மோர், பனை நுங்கு, பத நீர் உள்ளிட்ட இயற்கையான பானங்களையும் குளிர்பானங்களையும் மிகுந்த ஆவலுடன் அருந்தி வந்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு பிற்பகல் சுமார் 3 மணிக்குத் தொடங்கி சுமார் 40 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. அதிகம் காற்று வீசாமல், இடி மின்னல் இல்லாமல் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது. பல மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.