சாத்தூரில் தடையை மீறி மதுக்கூடங்களில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 940 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகள் இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் மூன்று தினங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சாத்தூர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் வீடுகளில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீஸார் சாத்தூர் அருகே அண்ணாநகர், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் சோதனை நடத்தினர். சோதனையில் மதுக்கூடங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அண்ணாநகர் மற்றும் காமராஜபுரம் பகுதியிலிருந்து 940 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபாட்டில்களை விற்பனை செய்த காளிமுத்து (35), மாரிமுத்து(37), சங்கிலிவீரபாண்டியன் (59)ஆகியோரை கைது செய்துள்ளனர்.