ஸ்ரீவில்லிபுத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்களி பேரணி நடைபெற்றது. மாலையில் பேருந்து நிலையம் முன்பு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் திமுக செயலாளர் வழக்குரைஞர் ஜி.ஜி.அய்யாவுபாண்டியன் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் முக்கிய வீதிகள் வழியாக, மோட்டார் சைக்கிளில் பகல் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
மாலையில் பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான தி.ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் பட்சிராஜா வி.சி.வன்னியராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பெ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், திமுக , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், சமூகநல ஆர்வலர் துள்ளுக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.