விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியைச்சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியதால் பொதுமக்களும், கால்நடைகளும்கூட மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்தது.
இந்நிலையில் புதன்கிழமை காலை சுமார் 11 மணிக்கு திடீரென கருமேகங்கள் திரண்டன. அதனையடுத்து ம.ரெட்டியபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான மறவர்பெருங்குடி, பரளச்சி, தும்முசின்னம்பட்டி, கானா விலக்கு ஆகிய பல்வேறு கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.
வழக்கமான கோடை மழை போலல்லாமல் அதிகம் காற்று வீசாமல், இடி மின்னல் இன்றி சுமார் ஒன்றரை மணி நேரம் வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.