விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் சாத்தூர் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியன புதன்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இதில், சாத்தூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இத்தொகுதியில் உள்ள 283 வாக்கு சாவடி மையங்களில் 566 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 283 கட்டுப்பாட்டு இயந் திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியன சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதேபோல், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 276 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தக் கூடிய 510 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 276 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு (விவிபேட்) இயந்திரங்கள் ஆகியன வாகனம் மூலம் புதன்கிழமை மாலை கொண்டு செல்லப்பட்டன.
அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 252 வாக்குச் சாவடி மையங்களுக்கு, 504 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 252 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியன அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்புடன் கொண்டு செல் லப்பட்டன.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 255 வாக்குச் சாவடி மையங்களுக்கு 510 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 255 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 310 வாக்கு சாவடி மையங்களுக்கு, 620 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்கு சாவடி மையங்களுக்கு, 594 வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலா 297 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியன பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
மேலும், இந்த 6 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதற்கு மாற்றாக, கூடுதலாக 1,643 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தரப்பில் தெரிவித்தனர்.
தேர்தல் பணியில் 9,803 பேர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,881 வாக்குச் சாவடி மையங்களில் 9,803 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணி புரிய உள்ளனர்.
இதில், ராஜபாளையம் தொகுதியில் 1,283 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 1,371 பேர், சாத்தூர் தொகுதியில் 2,045 பேர், சிவகாசி தொகுதியில் 1,343 பேர், விருதுநகர் தொகுதியில் 1,232 பேர், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,217 பேர், திருச்சுழி தொகுதியில் 1,312 பேருக்கு அந்தந்த பகுதிகளில் புதன்கிழமை இறுதிக் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அவர்கள் அனைவரும் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.