விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை மோசடி செய்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரன்(30). இவரது மனைவி லட்சுமியிடம் , சில நாள்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேஸ்வர் (19), கடத்தல் தங்கம் உள்ளதாகவும், 3 பவுன் நகையை கொடுத்தால் 6 பவுன் நகை தருவதாக கூறினாராம்.
இதையடுத்து லட்சுமி தனது 3 பவுன் நகையை கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசியபடி 6 பவுன் நகையை அவர் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து லட்சுமியின் கணவர் காளீஸ்வரன் கேட்டபோது, அந்த நகையை ராஜேஸ்வர் தனியார் வங்கியில் அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காளீஸ்வரன் நகையைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, ராஜேஸ்வர் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரைக் கைது செய்தனர்.