விருதுநகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற புனித இன்னாசியார் ஆலய தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தின் 75-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூலை 26 இல் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ், புனித இன்னாசியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நிகழ்ச்சியை, மதுரை உயர் மறை மாவட்ட நில பராமரிப்பு கண்காணிப்பாளர் ஜீவராஜ் சனிக்கிழமை இரவு தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை, புனித இன்னாசியார் திருஉருவம் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.
இத்தேர் பவனி ஆலயத்திலிருந்து தொடங்கி நகராட்சி சாலை, தெப்பம் தெற்கு, மேலரத வீதி, கடைவீதி வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.