சாத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

சாத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள மேலகாந்தி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை 

சாத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள மேலகாந்தி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
        விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட 8 ஆவது வார்டில் உள்ளது மேலகாந்தி நகர். இங்கு, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், நகராட்சி சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன் பொதுக் கழிப்பறை, குடிநீர் வசதி, வாருகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பொதுக் கழிப்பறைகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
        மேலும், நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், இப்பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை. அதேநேரம், இப்பகுதியில் முறையான வாருகால் பராமரிப்பு இல்லாததாலும், கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. அதேநேரம், இப்பகுதியில் உள்ள சில தெருக்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், தற்போது சாலைகள் மற்றும் சிறு பாலங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. 
      இப்பகுதியிலுள்ள ஒரு சில தெருக்களில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக சாலை தோண்டப்பட்டு, பெயரளவில் மட்டுமே பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
      எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com