சிவகாசியில் கொலை முயற்சி வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி சார்பு-நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ஈசாக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குழந்தைராஜ் (47) என்பவருக்குமிடையே முன்பகை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஈசாக் தனது மனைவி செல்லத்தாய் (45) மற்றும் மகன்கள் யாகோப்பு, ஜான்சன் ஆகியோருடன் அதே பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, குழந்தைராஜ் மற்றும் இவரது நண்பர் பெருமாளின் மகன் ஜெயராஜ் (45) ஆகிய இருவரும் சேர்ந்து, ஈசாக்கை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து செல்லத்தாய் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து, குழந்தைராஜ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, சிவகாசி சார்பு-நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், குற்றவாளிகளான குழந்தைராஜ், ஜெயராஜ் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அதன்பேரில், இவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.