விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் அமைந்துள்ள இறங்கி முத்தம்மன் கோயிலில், நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரத்தில் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது.
தொப்பலாக்கரை கிராமத்தில் இறங்கி முத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. அதில், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வீடுகள் மீது கல்வீசி வன்முறை நடைபெற்றதால், வருவாய்க் கோட்டாட்சியர் கோயில் திருவிழாவுக்கு தற்காலிக தடைவிதித்தார்.
இந்நிலையில், தற்போது கோயில் திருவிழா நடத்த அனுமதி கோரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதன்படி, ஒரு தரப்பினருக்குக் கோயிலில் விழா நடத்த, அவர்கள் விரும்பும் நாளில் 2 மணி நேரம் மட்டும் அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை கோயிலில் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் திருவிழா அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது.