மடத்துபட்டி நியாயவிலைக் கடை கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மடத்துபட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.
இதற்கான கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், நியாய விலைக் கட்டடம் சிதிலமடைந்துள்ளது. மேலும், நியாய விலைக் கடையின் வெளிப்புறச் சுவரும் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது.
இதனால், தற்போது நியாய விலைக் கடை அருகில் உள்ள மகளிர் குழு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடியிருப்புகளின் அருகில் இடிந்து விழும் அபாய நிலையிலுள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை சீரமைக்க, பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் கூறுகின்றனர்.
எனவே, நியாய விலைக் கடை கட்டடத்தை உடனடியாக சீரமைக்கவோ அல்லது அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.