விருதுநகரில் மனைவியை அடித்து விரட்டியதாக, கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது, போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ரகுராம்- தீபா தம்பதி. இவர்களுக்கு, கடந்த 2012 இல் திருமணம் நடைபெற்று, முகேஷ்ராம், முகுந்துராம் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ரகுராம் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பத்துக்கென எந்த செலவும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி மனைவியிடமும் தகராறு செய்துவந்தாராம். இதனிடையே, ரகுராம் வீட்டுக்கு வராததால், திங்கள்கிழமை மாமனார் வீட்டுக்கு தீபா சென்றுள்ளார். அங்கு, கணவர் ரகுராம் மற்றும் மாமனார் சுப்பையா, மாமியார் சுந்தரிபாய் ஆகியோர் சேர்ந்து, தீபாவை அடித்து துன்புறுத்தினராம். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீபா அளித்த புகாரின்பேரில், விருதுநகர் கிழக்கு போலீஸார் கணவர் ரகுராம் மற்றும் அவரது தாய், தந்தை ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.