விருதுநகர் ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதிகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீஸார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு முதல் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், விருதுநகர் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு வந்த மும்பை செல்லும் ரயிலில், ரயில்வே போலீஸார் பயணிகளிடம் சோதனை நடத்தினர். மேலும், ரயில் நிலையத்திற்குள் வந்து சென்ற பயணிகளின் உடைமைகளையும் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர், கவுசிகா நதி ரயில்வே பாலம் உள்ள தண்டவாள பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியானது ரயில்வே காவல் ஆய்வாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.