விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் ஆடி மாத முளைக் கொட்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
சத்திரப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாத முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் முளைப்பாரி திருவிழா ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கியது. விழாவில் தினமும் பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
முக்கிய விழாவான முளைப்பாரி திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி சுமந்து சத்திரப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, துரை மடம் விநாயகர் கோயில் அருகே உள்ள சுனையில் சென்று முளைப்பாரியைக் கரைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
விழாவில் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், உள்ளிட்ட ஊர்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மேற்கொண்டனர்.