விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள கணேஷ் நகரில் வசித்து வருபவர் வில்லப்பன் (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.
பின்னர் சனிக்கிழமை காலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகைககளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வில்லப்பன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு தடயங்களை சேகரித்தனர். அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.