சாத்தூர் அருகே புதிதாக குடிநீர் மேல்நிலைதொட்டி அமைப்பதற்கு சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
சாத்தூர் ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகர் பகுதியில் சுமார் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டை போக்க இந்த பகுதிக்கு தனியாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைப்பதற்கு ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கியது. இதையடுத்து குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தார்.
இதில் சாத்தூர் ஒன்றியச் செயலாளர்கள் சண்முககனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், நகரச் செயலாளர் வாசன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் சேதுராமனுஜம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும், கே.கே.நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.