விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் தங்கும் விடுதி கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளது என விருதுநகர் எம்எல்ஏ. ஏஆர்ஆர். சீனிவாசன் (திமுக) தெரிவித்தார்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, இருதய நோய்ப் பிரிவு, மருந்து மாத்திரைகள் வழங்குமிடம் மற்றும் செவிலியருக்கான தங்கும் விடுதி முதலானவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் உள் நோயாளிளாக சிகிச்சை பெற்றுவருவோரிடம் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் விஷக்கடி, நாய்க்கடிக்கு போதிய மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட செவிலியர் தங்கும் விடுதி தரமில்லாமல் உள்ளதால் சுவர்களில் சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. மேலும், எலும்பு முறிவு, கண் சிகிச்சைப் பிரிவிற்கு சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. அதே போல், சவக்கிடங்கு அறையில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உயிரிழந்தவர்கள் உடலை பாதுகாக்க முடியவில்லை. எனவே, புதிய கட்டடத்தில் உள்ள குறைகளை தீர்க்கவும், சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கவும், குளிர்சாதனப் பெட்டி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அப்போது அரசு தலைமை மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பிரகலாதன், சிறப்பு மருத்துவர் அன்புவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.