திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளர்களுக்கு, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தார்.
ராமநாபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அவர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரளச்சி, எம்.ரெட்டியபட்டி, கல்லூரணி, தமிழ்பாடி, ஆலடிபட்டி, இலுப்பையூர், இருஞ்சிறை, கட்டனூர், சாலை இலுப்பைகுளம், நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கல்லூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் வகையில், திருச்சுழியில் ஒரு அலுவலகம் திறக்கப்படும். இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், திமுக விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.