விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகள், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.ரெட்டியபட்டி மற்றும் திருச்சுழி வட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும், பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் (பிரதான் மந்திரி கிஸான் மான்-தன் யோஜனா)சேரலாம். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 60 வயது பூர்த்தியடைந்ததும் மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் மட்டுமே இணைய முடியும். ஒரு விவசாயிஅவரது வயதுக்கேற்ப மாதந்தோறும் ரூ. 55 முதல் ரூ. 200 வரை தனது 60 வயது வரை செலுத்தவேண்டும். இதில், மாதந்தோறும், 3 மாதம், 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என தமது வசதிக்கேற்ப தொகையை தனது வங்கிக் கணக்கு மூலம் செலுத்தலாம்.
இதில், எதிர்பாராதவிதமாக பணம் செலுத்திய விவசாயி இறக்கநேரிட்டால், அவரது வாரிசுதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுதவிர, 5 ஆண்டுகளுக்குப் பின் இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லையெனில், அவர் செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில், இபிஎப், என்பிஎஸ், அரசு ஊழியர் சேர முடியாது. விருப்பமுள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், வாரிசுதாரரின் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து, பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துபயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.