காரியாபட்டியில், பள்ளிக்கு செல்வதற்காக நடந்து சென்ற ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி, பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (40). இவர், சாலை மறைக்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சரஸ்வதி சனிக்கிழமை காலை தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். ஆசிரியை சத்தம் போட்டதால், அங்கிருந்தவர்கள் இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளனர். ஆனாலும், அவர்கள் இருவரும் நான்கு வழிச் சாலை வழியாக தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ஆசிரியை சரஸ்வதி புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.