விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கு தொடா்பாக, அக் கல்லூரி செயலாளரிடம் ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் உதவிப்பேராசிரியை நிா்மலாதேவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிா்மலாதேவி சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தாா்.
இந்நிலையில் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிா்மலாதேவி, உதவிப்பேராசிரியா் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஆஜராகினா். அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, நிா்மலாதேவி உள்பட 3 பேரும் டிசம்பா் 27-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டாா். இதனைத்தொடா்ந்து மகளிா் நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்டு, அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரிச் செயலாளா் ராமசாமியிடம் அரசு தரப்பில் விசாரணை நடைபெற்றது.