விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் ஆய்வாளரைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பந்தல்குடி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இது குறித்து வழக்குரைஞர் சீனிவாசன் கூறியது:
நான் பந்தல்குடி பகுதியில் எனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது என்னைச் சோதனையிட்ட பந்தல்குடி பெண் காவல் ஆய்வாளர் என்னுடன் வாக்குவாதம் செய்ததுடன் காரணம் ஏதும் கூறாமல் எனது வாகனத்தின் சாவியை பறித்துக் கொண்டார். என்னக் காரணம் எனக் கூற மறுத்ததுடன், விதிமீறல் குறித்து உரிய ரசீது தர கேட்டும், அவர் தராமல் என்னை அவமதித்து அனுப்பினார்.
இது தொடர்பாக நான் வட்ட சட்டப் பணிகள் குழுவிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடமும் புகார் செய்துள்ளேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டும் தாலுகா காவல் ஆய்வாளர் காலதாமதம் செய்து வருகிறார்.
எனவே பந்தல்குடி காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருப்புக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் 40-க்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், உரிய விசாரணை நடத்தி பந்தல்குடி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.