விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட 21 ஆவது வார்டு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விருதுநகர் நகராட்சி 21 ஆவது வார்டு பகுதியில் சுமார் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிவன் கோயில் தெருவில், வாருகாலில் அதிகளவு மண் தேங்கியுள்ளது. இதனால், வாருகாலில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது. இவற்றை, சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், ஏற்கெனவே, இருந்த குப்பைத் தொட்டியை நகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால், வார்டு முழுவதும் குப்பைகள் தேங்கி உள்ளன. இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் எரிவதில்லை. அதேபோல், விருதுநகர் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பெண்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். எனவே, எங்களது வார்டு பகுதியில் அடிப் படை வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.