விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரின் புறநகர்ப்பகுதியான காந்தி நகர் வழியாக புறவழிச்சாலையான மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகில் எம்.தொட்டியான்குளம் சாலைப்பிரிவில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையை குறுக்காகக் கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் சாலையைக் கடக்கத் தடை செய்து, போக்குவரத்துப் போலீஸார் வேலி அமைத்தனர். ஆனால் சில மாதங்களில் இந்த வேலி மீண்டும் திறக்கப்பட்டது. எனவே மீண்டும் இச்சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சாலையைத் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மணிமாறன், கார் மோதியதில் உயிரிழந்தார். அதனால் இப்பகுதியில் விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.