சிவகாசியில் செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி தெய்வானை நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது, பின்புறமாக வந்த ஒருவர் , ஹேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். இதையடுத்து அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், அய்யனார் காலனியைச் சேர்ந்த செல்வராஜன் மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.